நம் வாழ்வியல் முறையும், உணவு கலாச்சாரமும் மாறிவருவதால் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன.உடலில் உண்டாகும் நோய்களில் மலச்சிக்கலும் ஒன்று.. கவனிக்காமல் விட்டில் இதுவே அடுத்த நிலைக்கு நம்மை தள்ளிவிடும். அதையே பைல்ஸ் என்கிறோம்..
பைல்ஸ் எனும் மூலம்
பைல்ஸ் எனும் மூலநோய் வந்தால், கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்பட்டு, இரத்தப்போக்கு, அரிப்பு எரிச்சல் போன்றவை ஏற்படும்.
காரணங்கள்:
- உடலில் உண்டாகும் அதிகப்படியான வெப்பம்
- அதிக அளவில் காரமான உணவுபொருள்கள் எடுத்து கொள்ளல்..
- அதிகநேரம் உட்கார்ந்தே இருத்தல்
- நேரம் தவறி உண்பது.
- பட்டினி கிடத்தல் போன்றவை இதற்கு காரணம்…


சித்த மருத்துவத்தில் மூலம்
அனில பித்த தொந்தமலாது மூலம் வராது’தேரையர்சித்தர் கூறியது.
இதுவே பிணிகளுக்கான முதல் காரணம். அனிலம் என்பது வாதம் அல்லது வாயு.
நம் உணவுக்குடலில் சேரும் நாட்பட்ட வாயுவும்,சூட்டிற்கு காரணமான பித்தமும் ஒன்றுக்கூடி மலக்குடலை தாக்கி வீக்கத்தை உண்டாக்கி,மூலநோயை உண்டாக்கும்.ஆரம்பத்திலேயே உணவு முறையில் சரிசெய்துவிடுவது நல்லது.அதற்கான எளியசித்த மருத்துவ மூலிகை தான் ‘பிரண்டை‘


அகத்தியர் அவரது குணவாகடநூலில்
பிரண்டையை நெய்யால் வறுத்து பின்பரைத்து மாதே
வெருண்டிடா தேற்று விழுங்கில்-அரண்டுவரும்
மூலத்திணவடஙகும் மூலவிரத்தமாறும் ஞாலத்தினுள்ளே நூலில்
என்று கூறுகிறார்.
அதாவது பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு(500mg) எட்டு நாள் காலை மாலை சாப்பிட்டு வர எருவாயில் உண்டாகும் வலி, எரிச்சல் குருதிபோக்கு போகும்..
- மேலும் பிரண்டையை சின்ன சின்னதா வெட்டி உப்பிட்டு மோரில் போட்டு உலர்த்தி வடகமா பயன்படுத்தி வந்தால் வயிற்று சம்பந்தமான செரியாமையும் கபநோய்னு சொல்ற இருமல் சளி போகும்.
- இளந்தண்டை இலையோடு சேர்த்து பொடித்து சுக்குத்துள் மிளகுத்தூள் சேர்த்தது சாப்பிட்டாலும் வயிற்றுபிணிகள் போகும்..
- இதையே பாலில் சிறிது கற்கண்டு போட்டு குடித்தால் உடலை தேற்றி வன்மையை கொடுக்கும்.
- இளந்தண்டை துவையல் செய்து சாப்பிடுவது தான் ந்ம்ம நாட்டு வழக்கு..பசி உண்டாகும்
- பசியை தூண்ட சின்ன துண்டு பிரண்டையை சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து சாப்பிடலாம்..
- காதில் சீழ் வடிந்தால் பிரண்டையை சிறு தீயிலிட்டு வதக்கி சாறு பிழிந்து காதில் விட்டா போதும்.
- பிணியால் நொந்த உடலை தேற்றும்
- அந்தக் காலத்திலேயே உடைந்திருக்கும் எலும்புகளை விரைவாக சரிசெய்வதற்கும், மூட்டுகளில் இருந்து விலகிய எலும்புகளை சரியான இடங்களில் பொருத்துவதற்கும், பிரண்டையை, பயன்படுத்தியுள்ளனர்.இது சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருத்துவ முறையாய் இருந்து வருகிறது.
- வைரத்தைப் போல எலும்புகளுக்கு வலிமை அளிப்பதால் பிரண்டைக்கு ’வஜ்ஜிரவல்லி’ என்றொரு பெயரும் உண்டு. ’வஜ்ஜிரம்’ என்றால் ’வைரம்.


- இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும்..உபயோகிப்பதற்கு முன்பு கையில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய தடவிகொள்ளலாம்.
பிரண்டை உப்பு:
பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெயிலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.
- குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தையின் வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும்.
- பெரியவர்களுக்கு 2 முதல் 3 கிராம் வடித்த கஞ்சியில், அல்லது மோரில் கலந்து கொடுக்கலாம்.
- வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.
- தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 முதல் 96 நாள் வரை இரு வேளை சாப்பிட குணமாகும்.
- ஆசனவாயில் எரிச்சல் வலி அரிப்பு இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு கொடுத்தால் குணமாகும்… ..
- எளிதாக கிடைக்கக்கூடிய விட்டமின்C நிறைந்த பிரண்டையை வாரம் இருமுறையாயினும் துவையல் செய்து உண்டு வருவோம்..நலமுடன் வாழ்வோம்..ஆரோக்கியமான உணவினை உட்கொண்டு நீடித்த வாழ்வு வாழ்வோம்..
முக்கிய அறிவிப்பு:
மேலே கூறப்பட்டுள்ள செய்திகள் தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு மருந்துகளையும் சுயமாக எடுத்து கொள்வதற்கு முன்பு அருகிலுள்ள சித்த மருத்துவரை அணுகவும்.


Dr. Augastina B.S.M.S., PGDY, is a passionate Siddha Doctor with a heart of gold. She believes in healing one step at a time. In her writing, you’ll find not just knowledge, but genuine care and a holistic approach to health and well-being.